Wednesday, November 23, 2022

அஞ்சல் - 15

 அன்புக்குரிய தோழி!! 


ஒரு காலத்தில் , 1983ம் ஆண்டுக்கு பின்னான இந்த நாட்களில் நீ நலமா என்று என்று கேட்டறியும் வழியில்லாமல் இருந்திருக்கிறேன்… இப்போது அநேகமாக ஒவ்வொரு நாளும் ஆசை தீர நீ அலுப்படையும் வரை நலமா நலமா என்று கேட்கும் வழியை தந்த விதியோ கடவுளோ எதுவோ ஒன்றுக்கு நன்றி கூறிக் கொண்டு உனக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சிவசோதி!!



உன்னைத் தேடிக் கண்டு பிடித்த பின் எனது அஞ்சல்கள் எழுதப்படுவது நின்று விடும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அது இனியும் தொடர்வது நல்லது என்றே நினைக்கிறேன்..!


இந்தக் கடிதங்கள் எமக்கிடையிலான நட்பின் அடையாளங்களைக் கொண்ட பதிவுகள். இங்கே  எனக்கு உன்னிடம் சொல்ல வேண்டிய கவலைகள் இருக்கும். ஆதங்கம் இருக்கும். கோபங்கள் அடங்கும்.  என் ஏக்கங்கள் இருக்கும். உனக்கு வர வேண்டிய வாழ்த்துகள் கொட்டிக் கிடக்கும், மொத்தத்தில் உன்னிடம் பகிர வேண்டிய அல்லது பகிரப்பட்ட விசயங்களை எழுத்து வடிவில் பாதுகாத்து ஒரு அஞ்சல் பெட்டகமாக நான் இதை வைத்திருக்கப் போகிறேன். 


ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என்பார்கள். ஆனால் நான் பிரசவங்கள் தவிர்த்து இரண்டு தடவை மறுபிறவி எடுத்திருக்கிறேனடி. ஒன்று பதினொரு வருடங்களாக காத்திருந்து திருமணம் செய்த போது…இரண்டாவது 1983 ஜூலை 10ல் பிரிந்து போன உன்னை மீண்டும் குரல்வழியாக சந்தித்த போது….!! 


வாழ்கையில் எத்தனையோ கடந்து வந்துவிட்டோம்…! துள்ளித்திரிந்த காலங்களில் அறிமுகமாகி, துளிர்விட்ட தனி உலகத்தை நமக்கென்று படைத்துக் கொண்டிருந்த முனைப்பில் காணாமல் போய், இப்போது திரும்பவும் துள்ளவியலாத கடை நேரத்தில் சந்தித்திருக்கிறோம்..! எத்தனையோ இழந்திருக்கிறேன்..எவை எவையோ என்னை விட்டுப் போயிருக்கின்றன. ஆனால் கிடைத்த நட்புகள் எதுவும் என்னைக் கைவிடவில்லை. கடந்து போன காலங்களில் கூட ஒருத்தரை ஒருத்தர் நினைத்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு சம்பவமோ புகைப்படமோ நினைவுகளோ நம்மிடம் இருந்தது. 


சந்திக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஆனால் சந்தித்த பின் பிரிய வேண்டுமென்ற நினைப்பு அறுக்கிறது. ஆண்களின் நட்பு நினைத்த நேரத்தில் சந்திக்கவும் , அளவளாவவும், நிச்சயம் அடுத்த தடவை சந்திக்கலாம் என்ற தெளிவோடு திரும்பவும் தொடரும். ஆனால் பெண்களின் உண்மையான நட்பு பள்ளிக் காலங்களோடு முடிந்து போய்விடும். ஆண்களைப் போல் அடிக்கடி பழைய நட்புகளை சந்திக்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்காது. 



 கணவன் என்ற ஒரு உறவு வர முன்பே சந்தித்த தோழி, வாழ்கையின் ஒவ்வொரு சின்ன சின்ன நிகழ்வுகளையும் , கனவுகளையும், விசயங்களையும் பகிர்ந்து கொண்ட , சொல்லப் போனால் இரத்த உறவுகளாலும், கணவர் குழந்தைகளாலும் கூட புரிய முடியாத எமது மனநிலையை ஒரு பார்வையில் புரிந்து கொள்ளுமளவுக்கு உயிராக இருக்கும் சிநேகிதி , எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் தினமும் சுற்றித்திரிந்த நண்பி.. அவளுடைய நட்பு பள்ளிப் படிப்போடு மூட்டை கட்டப்பட்டு , மனதின் ஞாபகக் கலங்களுக்குள் பத்திரமாக புதைக்கப்பட்டுவிடுவாள் நினைவுகளாக.  அவ்வப்போது பிறந்தநாளுக்கும், விசேச தினங்களுக்கும் மறக்காமல் வாழ்த்து அட்டையும் கடிதமுமாக ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த பாலம் இருவரின் திருமணத்துக்கு பின் அப்படியே தொய்ந்து போய்விடும் ..நட்பு என்ற பயணிப்பை இருவரும் முற்றாக நிறுத்திவிட்டு வேறு பாதைகளில் அவர்கள் பயணம் தொடங்கிய புள்ளிகளில்  சிநேகிதிகள் எனப்பட்டவர்கள் நினைவாலே செதுக்கபப்ட்ட சிலைகளாகிவிடுவார்கள். 


அதில் முழுப் பிழையும் பெண்களிடம் தான் இருக்கிறது. திருமணமென்றான பின் என்னமோ எல்லாமும் , எல்லாரும் நம்மைத் தான் நம்பியிருக்கிறார்களென்று ஒரு தேவையில்லாத முட்கிரீடத்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம்.  அவர்களை மட்டும் கவனிப்பது அவர்களுக்கு பணிவிடை செய்வது, அவர்களை முகம் நோகாமல் , மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள நம்மை விட்டால் வேறு யாருமே இல்லை என்று நாமும் நம்பி அவர்களையும் மூளைச்சலவை செய்து எமக்கான எதையும் நாம் அனுபவிக்காமல் , இரசிக்காமல் , பொழுது செலவிடாமல் நம்மை நாமே முடக்கிவிட்டு , நமக்கு நாமே சுமையாக தெரிகிறோம். எமது நட்புகளை நாமே தொலைக்கிறோம். தொடர்புகளை கழற்றிவிட்டு செக்கு மாடுகளாக உலாவர நம்மை நாம் தான் நியமித்துக் கொள்கிறோம். நமக்காக எப்போதாவது நேரம் ஒதுக்கிறோமா என்று சிந்தித்துப் பார்த்தால் பெரும்பாலான பெண்களின் உள்மனம் ஓலமிட்டு அழும். 



பழைய தோழிகளை  சந்திப்பது கூட கணவரின் அனுமதியுடனோ அல்லது அவருடனோ தான் இருக்கும்.  சந்தித்தால் கூட வீட்டுக்கு போக வேணும், பிள்ளைகளுக்கு சமைக்க வேணும், கணவன் வரும் நேரம் என்று மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். பள்ளிக்காலங்களில் சுற்றித்திரிந்த அந்த சுதந்திரம் இருக்காது. 


சந்திக்க வரும் போது கூட புருசன் கூடவே வர வேண்டுமா என்று நான் அவளையோ அவள் என்னையோ கேட்க முடியாது..! என்னை விட்டிட்டு அவரால ஒரு நிமிசம் கூட இருக்க முடியாது என்று பச்சைப் பொய்யை உற்ற தோழியிடமே சொல்லிக் கொள்ள வேண்டும். ஏனெனில் உரிமை என்பதும் , கடமை என்பதும் , வாழ்கை என்பதும் நட்புக்கோ , தோழிக்கோ இல்லை என்பதை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது. நாம் மூன்றாம் இடத்திலோ அல்லது அதற்கும் கீழேயோ தள்ளப்பட்டவர்கள் தான் என்பதை தனது தோழிக்கு திருமணம் நடந்து முடிந்த பின் தான் ஒவ்வொரு பெண்ணும் உணர்வாள்.  

 

என் தோழி சந்தோசமாக இருக்கிறாள், என் தோழி வாழ்கையில் நல்ல நிலையில் இருக்கிறாள் , என் தோழி உயர்ந்திருக்கிறாள் என்ற பூரிப்புடன் பார்ப்பதும், அல்லது அதற்கு நேர்மாறான வாழ்கையை வாழும் ஒரு தோழியைப் பார்த்து மனம் புழுங்கி அழுவதும்  தான் நட்பு என்றளவில் தான் பெண்களின் நட்பு இருக்கும். 


அத்தைகைய சூழலில் தான் எனது நட்பு வட்டமும் இருக்கிறது. அடிக்கடி தொலை பேசியில் நலம் விசாரிக்க முடிகிறது. கவலைகளையும் சந்தோஷங்களையும் , கிண்டல் கேலிகளையும் பகிரமுடிகிறது. ஆனாலும் ஒரு எல்லைக்குள் நின்று கொள்கிறோம். ஒருத்தி இலங்கையில், இன்னொருத்தி நோர்வேயில், மற்ற இரண்டு பேர் கனடாவில், இன்னும் இரண்டு பேர் லண்டனில் என்று இண்டர்நேஷனல் லெவலில் எனது நட்பின் விஸ்தாரணம் பரந்து விரிந்திருக்கிறது என்ற தம்பட்டத்தின் அடியில் சந்திக்கவியலாத சோகம் இருக்கிறது. பார்க்க முடியுமா என்ற ஏக்கம் இருக்கிறது. பார்க்காமலே போய் சேர்ந்துவிடுவோமா என்ற பயம் இருக்கிறது.


இத்தனை  வருடங்களுக்கும் மேலான பிரிவின் பின்னான சந்திப்பு ஒன்று நிகழுமாயிருந்தால் கூட  இரண்டு கிழமையோ 10 நாளோ என்ற நிபந்தனைகளுடன் தான் நிகழும். அதுவும் தனித் தனியாக தான் சந்திப்போம். பள்ளி நாட்களில் ஆறு பேரும் ஒன்றாக சந்தித்து , சுற்றித் திரிந்தது போல் இனிமேல் நம்மால் சந்திக்கவோ திரியவோ முடியாது. பழைய வாழ்கையின் எந்த சுவடும் கிடையாத ஒரு சூழலில் உற்ற தோழியர் கூட  இன்னொருவர் போல் நின்று நலம் விசாரித்துவிட்டு விலகிப் போவோமோ என்ற பரிதவிப்பைப் பார்க்கிலும் சந்திக்காமலே இப்படியே இருந்துவிடுவது மேல் என்று தோன்றுகிறது.



சந்திக்கிறோமோ இல்லையோ , உன்னை செல்லமாக சீண்டி , பொய்யாக சண்டை போட்டு, ஓயாமல் சிரித்துக் கொண்டு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்புடன் இப்படியே காலங்கள் போய்க் கொண்டிருந்தாலே போதும் இன்னொரு தடவை காணாமல்  மட்டும் போய்விடாதே என்ற பிராத்தனைகளுடன் , எங்கிருந்தாலும் எல்லா வளங்களும் நலன்களும் கூடிய வாழ்வில் நீ நல்ல ஆரோக்கியத்துடன் கணவர் பிள்ளைகள் என்ற செல்வங்களுடன் நீண்ட காலம் நல்வாழ்வு வாழ வேண்டுமென்ற நல்வாழ்த்துகளுடன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளடி !! 


நல்வாழ்வு வாழ்க !! நல்வாழ்த்துகள்..!! 


அன்புடன்


 நான் .



Wednesday, October 12, 2022

அஞ்சல் 14

 அன்புள்ள தோழிக்கு!

வாழ்கைத் துணை !

என்னைப் பொறுத்தவரை கடைசி வரை எம்முடன் யாரும் பயணிக்கப் போவதில்லை. ஏதோ ஒரு முனையில் ஒவ்வொருவரும் எம்மை விட்டுப் பிரியத் தான் போகிறார்கள். பெற்றோர், உடன் பிறப்புகள், உறவுகள், பிள்ளைகள் என்று எல்லாருமே ....  ஒரு வகையில் எம்மோடு அதிக காலம் தொடர்ந்து வரும் உறவு என்றால் எமது வாழ்கையில் இடையில் எம்முடன் ஒட்டிக் கொள்ளும் எமது வாழ்கைத் துணை தான். 


உன்னைக் காணாமல் தேடி அலைந்த இந்த 37 வருடங்களில் நீ இருக்கிறாயா இல்லையா என்ற கேள்விக்கு அடுத்து , இருந்திருந்தால் உனக்கு திருமணமாகியிருக்கும் என்ற யதார்த்தம் உறுத்தும் போதெல்லாம்  காரணமேயில்லாமல் கோவப்பட்ட, பொறாமைப்பட்ட  கிட்டத்தட்ட திட்டிய ஒரு பிறவி என்றால் அது உனது கணவராகத் தான் இருக்கும். திட்டும் போது கூட நினைப்பேன் ஏன் இத்தனை வன்மம், முகம் தெரியாத அந்த நபர் மீது என்று. என்னவோ உன்னை என்னிடமிருந்து பிரித்து வைத்திருக்கும் வில்லனாக தான் மனம் அவரை உருவகப்படுத்தியிருந்தது.  சிநேகிதி படத்தில் தபு சொல்வது போல் பெண்களைப் பொறுத்தவரை பள்ளித் தோழமை என்பது பள்ளி முடியும் போதே முற்றுப் பெற்றுவிடும் அத்தியாயம். அதன் பின் பழைய  ஆட்டோகிராப்பிலும், புகைப்படங்களிலும் கண்ணீருடன் கழிந்துவிடும் நினைவுகளாக மட்டுமே இருக்கும் என்பதை எனக்கு விதியாகக் கிடைக்கக் காரணமே நம் இரண்டு பேரின் கணவர்மார் தான் என்று கூட நினைத்து கோபப்பட்டிருக்கிறேன். 


நாட்டில் போர் நடக்காமல் இருந்திருந்தால் எமக்கு இந்த பெரிய இடைவெளி வந்திருக்காது. இத்தனை மைல்களுக்கப்பால் வெவ்வேறு திக்குகளில் எமது வாழ்கையை பிடுங்கிப் போட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. வெளி நாடு வந்த பின் எத்தனையோ திருமண விழாக்களுக்கு போகும் போதெல்லாம் மனதை அரிக்கும் உனது திருமணக் கோலத்தை காணக் கிடைக்கவில்லையே, என்னுடைய திருமணத்தில் நீ இல்லையே என்ற உறுத்தல். 

ஆனால்...எல்லாம் முடிந்து வாழ்கையின் கடைசிப் பாகங்களில் திரும்பவும் உன்னுடைய தொடர்பு கிடைத்திருக்கிறது. இரண்டு பேரின் வில்லன்களுமே இத்தனை வெகுளிகளாக இருப்பார்கள் , இத்தனை அன்பானவர்களாக இருப்பார்கள், நான் போன் செய்யாவிட்டால் என்னவரோ நீ எனக்கு போன் செய்தாயோ என்று உன்னவரோ அக்கறையாக விசாரிக்கிறார்கள் பார்... வாழ்கையில் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறோம் என்றே உணர வைக்கிறது.

அதுவும் உனது கணவர் ....

இத்தனை காலம் வில்லனாக  எனது மனதில் இருந்த ஒரு நபர்...முதல் முதல் பேசிய அந்த ஒரு கணத்தில்.....அப்படியே தலைகீழாக உருமாறி உட்கார்ந்ததை நினைக்கும் போது ....சந்தோசமும் , ஆச்சரியமும் கலந்த கலவையான உணர்வு போராட்டம்..!! இன்று வரை எத்தனை கிண்டல், எத்தனை கிரந்தம் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்......எவ்வளவு இலேசாக எவ்வளவு இயல்பாக....??  அண்ணா அண்ணா என்று நாங்கள் 3 தோழியரும் அவரிடம் பாசம் கொள்ள வைத்துவிட்டார்...!! எந்த நக்கலுக்கும் வீடே அதிரும்படி அவர் சிரிக்கும் குழந்தைத்தனமான சிரிப்பை கேட்கும் போதெல்லாம் என் தோழி பாக்கியசாலி என்று நிம்மதியான உணர்வு கிடைக்கிறது.

அவரை விட்டுட்டு எப்பிடி நான் வாறது என்று கேட்கும் போது..என்னவோ கைக்குழந்தையை தனிய விட்டுவிட்டு வர முடியாமல் தவிக்கும் தாய் மாதிரி தான் உன்னை பார்க்கிறேன்..ஆனால் கிண்டல் செய்யாமல் என்னால் இருக்க முடிவதில்லை,. ! 


உன்னைக் காணாத நாட்களில் நீ இருக்கிறாயா இல்லையா என்ற கவலை ஒரு புறம் இருந்தால் உன் கணவர் உன்னை எப்படி நடத்துகிறார் நீ சந்தோசமாக இருக்கிறாயா இல்லையா என்றெல்லாம் நினைத்து நினைத்து மாய்ந்து போயிருக்கிறேன். இப்போது அண்ணாவுடன் பேசிய பின் ஐயோ பாவம் இந்த மனுசன் உன்னிடம் என்ன கஷ்டப்பட்டாரோ என்று யோசிக்க வைத்துவிட்டார்.   :) 

இன்று உன்னவருக்கு பிறந்த நாள்...! இன்று இத்தனை சந்தோசமாகவும் , சிரிப்பும் குதூகலமாயும் நீ இருக்கிறாயென்றால் அது நிச்சயம் நிம்மதியான வாழ்கையை நீ வாழ்வதால் மட்டுமே...  !  தன் மனைவியை சக மனுசியாக , கௌரவமாக  நடத்த தெரிந்த கணவனால் மட்டுமே ஒரு பெண் நிம்மதியான , குதூகலமான வாழ்கையை பயணிக்க முடியும். உனக்கு அப்படியான வாழ்கை கிடைத்திருக்கிறது. இந்த வாழ்கை உனக்கு என்றைக்குமே நிலைக்க வேண்டுமென்று  அண்ணா நீண்ட காலம் எல்லா வளமும் நலனும் பெற்று , ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெறு அவருடைய பிறந்தநாளான இன்று மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.

அண்ணா ! என்றைக்கும் எங்கள் தோழி இதே சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்ற முக்கிய காரணத்தாலும், எங்கள் தோழியின் அன்புக்குரிய காதல் கணவனாக நீங்கள் இருப்பதாலும் உங்கள் பிறந்தநாளான இன்று எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் பல!! 

I didn't get you a Birthday present, Because you already have it all - My friend Sivasothy!! Happy Birthday அண்ணா !! 

Monday, March 21, 2022

அஞ்சல் - 13

இனிய தோழிக்கு....!!


நலம் நலமறிந்தேன்...மகிழ்ச்சி!!      



உங்கள் இருவருக்கும் , நமது மனம் நிறைந்த இனிய இரண்டாவது திருமணநாள் நல்வாழ்த்துகள்..!!  (என்ன முழிக்கிறாய்??) 

உனக்கு எத்தனையோ திருமண நாட்கள் கடந்திருக்கலாம் , ஆனால் அத்தனை வருடங்களிலும் நான் உன்னோடில்லை...நீயும் என்னோடில்லை...அதனால் உன்னை திரும்ப சந்தித்த பின் நான் மனதாரா வாழ்த்தக் கிடைத்த இரண்டாவது வருட திருமணநாள் என்பதால் என்னைப் பொறுத்தவரை இது இரண்டாம் ஆண்டுப் பூர்த்தி தான்...!! :) 

 மனம் நினைத்த வாழ்வு , மனமொத்த கணவன் வாய்க்கும் போது தான் ஒரு பெண்ணுக்கு கை கூடும்.  நினைவொன்றாய், நிழல் தொடர்வாய், கரம் பிடித்த கணம் தொட்டு கடையாழ் நிலை வரும் வரை உயிரொன்றாய் உடலிரண்டாய் வாழும் வாழ்கை தான் பரிபூரண தாம்பத்யம் என்றாகும், இந்த வகையில் என் தோழியை கரம் பற்றிய அதிர்ஷ்டத்தால் கணமொவ்வொன்றும் காதலாக , வயதானா நினைவு மட்டும் செலக்டிவ் அம்னீஷியாவாக வாழும் அதிர்ஷ்டசாலியான என் அன்பான அண்ணருக்கும், வரமாக கிடைத்த கணவனை தவமின்றி பெற்ற பாக்கியவதியான என் உயிர் தோழி சிவசோதிக்கும் எங்கள் மனம் நிறைந்த ஆசீர்வாதங்களும், அன்பும், நல்வாழ்த்துகளும் உங்கள் இருவரின் மணநாள் ஆண்டுப் பூர்த்தியான இந்நன்னாளில் உரித்தாகுக..!!




இன்று போல் என்றும் இணைபிரியா அன்றில் பறவைகளாய் 

அன்புடனும் அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் இல்வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்,






அன்புடன்

சாந்தா , தேவன்

அஷ்வா & அச்சுதன்

அம்மா மற்றும் யாவரும்